Tuesday, June 12, 2007

ஓடாதே

அஞ்சு வருடம் ஆச்சு பெற்றவர்களை எதிர்த்து வெளியே வந்து. அப்புச்சி அப்பவே சொன்னாக என் புருசனை பத்தி. எனக்கு தான் அவர் மேல இருந்த ஆசைல உண்மை மறைஞ்சுடுச்சி..

இப்போ டவுனுல ஒண்டு குடித்தனம். இந்த மனுசன் சம்பாரிக்கறது வாய்க்கும்,வயித்துக்குமே பத்தலை. இதுல என்னாத்த சேத்தி வைக்க. பத்தாததுக்கு ரெண்டு குழந்தைக வேற. தெய்வ பரிசுன்னு சொல்ற புருஷன் குமட்டுல குத்தலாம் போல ஆத்திரம் வரும். இந்த ஆள் சுகத்துக்கு ஆண்டவனை இழுத்துகிட்டு.

அஞ்சு வருசத்துல பட்ட கஷ்டத்துல புரியுது. காதல்ன்னா ஆசை மட்டும் பத்தாது,நிதானமா முடிவேடுக்கணும்ன்னு. இப்போ மூணாவதா வயித்துல. தெய்வபரிசுன்னு சொன்ன ஆளே கருவை கலைக்க சொல்லுது.
நோவு வந்தா அம்மா நினைப்பா இருக்கும். ஒழுங்கா அவங்க சொன்ன பேச்சை கேட்டிருந்தா இந்த வருத்தம் இருந்திருகாதோன்னு இப்போ தோணுது..

சட்டியில் வைத்த கஞ்சி பொங்கி கையில் தெறித்ததில் தங்கம் சிந்தனை கலைத்தாள். தூரத்தில் குறும்பு செய்துட்டு ஓடுன பையனை பாத்து அப்பா கத்தர சத்தம் கேட்குது "ஓடாதே". வயக்காடு தாண்டி இந்த மனுஷன் கூட ஓடுனப்போ கேட்ட அப்புச்சியின் குரல் போல.தங்கம் கண்ல உருண்ட கண்ணிரில் அவர் வலி உணர்கிறாள்..

1 comment:

rahini said...

இதுக்குத்தான் சொன்னான் ஓடவேண்டாம் என்று